Sunday, 18 September 2016

வறுமையைப் போக்கிய நாரை

நான் யாப்பிலக்கணம் பற்றி வலைதளத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஆசிரியர் நேரொன்றாசிரியத்தளை மற்றும் நிரையொன்றாசிரியத்தளைக்குச் சான்றாக இப்பாடலின் முதல் 2 வரிகளை எழுதி விளக்கினார். தளை புரிந்ததோ இல்லையோ இப்பாடல் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. இப்பாடல் வரிகள் மிக எளிதாகப் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில் உள்ளது.இவ்வளவு அழகான பாடல் எங்கள் பாட நூல்களில் இடம் பெறவில்லை என்பதே என் வருத்தம். எங்கள் பெற்றோர் காலத்தில் அவர்களின் தமிழ்ப் பாடநூலில் இப்பாடல் இருந்ததாகக் கேள்விப்பட்டேன் . 

இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் சத்திமுத்தம் என்றொரு ஊர் உள்ளது . 
அங்கு ஒரு புலவர் இருந்தார். அவர் தன் மனைவியுடன் ஒரு சிறு குடிலில் வறுமையில் வாழ்ந்து வந்தார் .சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்ற வழக்கு சரி தான் போலும். 

அக்காலத்தில் பாடல்கள் பாடிப் பரிசில் பெற்றாலொழியப் புலவர்களுக்கு வேறு வருமானம் ஏது?.இப்புலவர் பரிசில் பெற விரும்பி மதுரை வரை சென்றார். அப்போது மதுரையைப் பாண்டியன் மாறன் வழுதி ஆண்டுகொண்டிருந்தான். புலவர் அரண்மனை வாசலில் இருக்கிறார் . கண்ணகியைப் போன்றே இவருக்கும் வாயிற்காப்போனால் பிரச்சனை. இவர் எவ்வளவோ முயன்றும் தன் புலமையை வெளிப்படுத்தியபோதும் ஒன்றும் பலனில்லை .இவர் அரண்மனை செல்ல அனுமதி கிடைக்காததால்  வருத்தத்தோடு திரும்பினார் . ஒரு இடத்தில் வந்து படுத்தார் . வானத்தைப் பார்த்தவாறு தன்  மனைவியையும் வறுமையையும் எண்ணிக் கொண்டிருக்கிறார் . அப்போது 2 நாரைகள் அவர் மேலே பறந்து செல்கின்றன .நாரையைத் தன் மனைவிக்குத் தூது அனுப்புவதாக நினைத்து இப்பாடலைப் பாடுகிறார்.


"நாராய் நாராய் செங்கால் நாராய் 
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் 
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி 
வடதிசைக்கு ஏகுவீராயின் 
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி 
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி 
பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு 
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் 
ஆடையின்றி வாடையில் மெலிந்து 
கையது கொண்டு மெய்யது பொத்தி 
காலது கொண்டு மேலது தழீஇப் 
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் 
ஏழையாளனைக் கண்டனம் எனுமே" 

சத்திமுத்தத்தில் இருக்கும் என் மனைவியைப் பார்த்து இச்செய்தியைக் கூறுங்கள் என்று நாரையை நோக்கிப் பாடுகிறார். 

பவள நிறம் கொண்ட பனங்கிழங்கு பிளந்தது போன்ற கூறிய மூக்கும் சிவந்த கால்களும் கொண்ட நாரையே !. நீயும் உன் துணையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடி வட திசை நோக்கிச் செல்ல  நேர்ந்தால் வடதிசையில் சத்திமுத்தம் என்ற என் ஊர் உள்ளது. அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுங்கள் , அங்கு மழையில் நனைந்து உருக்குலைந்த சுவர் கொண்ட என் வீடு இருக்கும். என் மனைவி அச்சுவரின் கூரையில் இருக்கும் பல்லியின் குரலையே சகுனம்  கிடைப்பதாக எண்ணி அதைப் பார்த்துக்கொண்டிருப்பாள் . 
அவளிடம் உன் கணவனைக் கண்டோம் எனக் கூறுங்கள் . மன்னன் மாறன் வழுதி ஆளும் மதுரை நகரில் உன்  ஏழைக் கணவன் மேலாடையின்றி கைகளால் உடலைப் போர்த்தி மேல் உடலைத்  தழுவுமாறு கால்களை வயிறு வரை சுருக்கி வாடைக் காற்றால் மெலிந்து பெட்டிக்குள் இருக்கும் பாம்பு போல் உயிர் வாழ்கின்றான் என்று சொல்லுங்கள் என்கிறார் . 

இவர் பாடும் சமயம் பாண்டிய மன்னன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று கொண்டிருந்தான்.மன்னன் நாரையின் மூக்கிற்கு உவமை தேடிக்கொண்டிருந்தான். பல அறிஞர்களிடம் கேட்டும் பலனில்லை .நாரையின் மூக்கைப் பனங்கிழங்கிற்கு ஒப்பிட்ட இப்பாடலைக் கேட்டு மிகவும் களிப்புற்றான்.தன்மேலாடையைப் புலவர் மீது எறிந்து விட்டு வேகமாகச் சென்றுவிட்டான். பின் காவலாளிகள் மூலம் புலவரை அரண்மனைக்கு வரவழைத்துத் தகுந்த வெகுமதி அளித்தான் . அவர் வறுமையும் நீங்கியது.

அருஞ்சொற்பொருள் :

நாராய்  - நாரை என்பது பறவையின் பெயர். அழைக்கும்போது நாராய் என்று விளிச்சொல் ஆனது.  
செங்கால் - சிவப்பான கால் 
பழம்படு பனையின் கிழங்கு - நாள்பட்ட பனைக்கிழங்கு (முற்றிய கிழங்கு)
பிளந்தன்ன - பிளந்து + அன்ன  - பிளந்தது போன்ற 
பவளக் கூர்வாய் - பவளம் போன்ற சிவப்பான நிறத்தில் கூர்மையாய் உள்ள வாய் 
பெடை - பெண் நாரை 
தென் திசைக் குமரியாடி - குமரியாடுதல் என்பது கன்யாகுமரியில் நீராடுதல் 
ஏகுவீராயின்- ஏகுவீர் +ஆயின் - ஏகுதல் - செல்லுதல் 
ஏகுவீர் +ஆயின்  - செல்வீர்களானால் 
எம்மூர் - எம் +ஊர்  
சத்திமுத்தம்  - இவ்வூர் ஒரு சைவத்தலமாகும் . கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது .
வாவி - நீர் நிலை 
கனைகுரல் பல்லி - கனைக்கும் குரல் கொண்ட பல்லி 
பல்லி பாடு பாத்திருக்கும் எம் மனைவி - பல்லியையே பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி (மிக வறுமை . பல்லியின் குரலைக் கொண்டு நல்ல சகுனமாக இருந்தால் அன்று உணவு கிடைக்கும் என்று நம்பிக்கை .அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை )
எங்கோன் மாறன் வழுதி - எம் + கோன் - என் அரசன் மாறன் வழுதி 
தழீஇ - தழுவி 

Reference :

Tuesday, 16 February 2016

தேன் மழை பொழிந்த சர்க்கரைப் பந்தல் ( வள்ளல்கள் - 2 )

17ம் நூற்றாண்டில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அச்சமயத்தில் அமைச்சராக இருந்தவர் தளவாய் ராமப்பையர். இவர் பாளையக்காரர்களிடம் வரி வாங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். கொங்கு நாட்டில் , ஆணூரில் வேளாளர் தலைவராக இருந்த பாளையக்காரர் பெயர் சர்க்கரைச் சம்பந்த மன்றாடியார். இவரும் ராமப்பையரிடம் வரி செலுத்தி வந்தார். சர்க்கரை இனிமையான பண்பாளராகவும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்து வாரி வழங்கும் வள்ளலாகவும் விளங்கினார். ஆதலாலேயே அனைவரும் மனமுவந்து சர்க்கரை என்று அழைக்கும்படியான அடைமொழியைப் பெற்றார். இவரை நாடி வந்த புலவர்கள் பொருள் மட்டுமல்லாது சர்க்கரையுடன் பழகி அன்பாகிய செல்வத்தையும் பெற்றுச் சென்றனர். அது மட்டுமின்றி அவருக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் அப்பகுதி மக்கள் , சமையலில் பயன்படும் சர்க்கரையை சர்க்கரை என்று கூறாமல், " இனிப்புப் பொடி" என்று வழங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிகிறோம்.
ஒருமுறை ஆணூரில் கடும்பஞ்சம் நிலவியது. ஆதலால் சர்க்கரையிடம் இருந்த பல பசுக்களும் எருதுகளும் இறந்தன. அவராலும் அதே நிலையில் இருந்த வேறு சிலராலும் வரி செலுத்த இயலவில்லை. அவர்கள் தம் குறைகளை விண்ணப்பித்தும் பலன் இல்லை. ராமப்பையர் இவர்கள் அனைவரையும் சதுரகிரி துர்க்கத்தில் சிறையில் அடைத்தார்.
இந்நிலையில், சர்க்கரையை வெகு நாட்களாகக் காணும் ஆவலோடு இருந்த புலவர் ஒருவர் ஆணூருக்கு வந்தார். செய்தி அறிந்து மிகவும் மனம் நொந்தார். அங்கிருந்த மக்கள் நீங்கள் வேறொரு நல்ல சமயத்தில் வாருங்கள் என்று கூறிய போதும் கேட்காமல், வள்ளலைக் கண்டே தீருவேன் என்று உறுதி கொண்டு சதுரகிரி சிறைக்குச் சென்றார்.
மன்னர்களிடம் நேரிடையாகப் பேசுவது, கைதிகளைக் காண்பது போன்ற துணிவான செயல்களுக்கு அக்காலத்தில் புலவர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஏனெனில் இவர்கள் கற்றறிந்த சான்றோர்கள் அல்லவா?
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பன்றோ?
சிறை என்றாலும் கைதிகளின் உறவினர்கள், புலவர்கள் வந்து செல்ல அனுமதி இருந்தது. 
புலவர் சிறைக்கு வந்தார். சர்க்கரையின் புகழ் பாடிய வண்ணம் சர்க்கரை யார் என்று வினவினார். அப்போது அங்கே கூட இருந்தவர்களில் ஒருவர் சிறையிலும் கூடவா யாசகம்? நல்ல சமயத்தில் வந்தீரே என்று புலவரை இகழ்ந்தார். அதற்கு, " பொருள் பெறுவோர் வீடு சிறை என்று பார்ப்பதில்லை. பொருள் கொடுப்பவர்க்கும் அந்தப் பேதம் இல்லை. நிலவை ஒருபுறம் இராகு பற்றிய போதும் மறுபுறம் அது தன் பால் ஒளியை வழங்கிக்கொண்டே செல்கிறதே. அதை நீங்கள் கண்டதில்லையோ? அந்நிலவைப் போன்றவர்கள் வள்ளல்கள் என்ற பொருளில் ஒரு பாடலைப் பாடினார். உடனே அவர்கள் இகழந்ததை விடுத்து, புலவரைத் தகுந்த மரியாதையுடன் சர்க்கரையிடம் அழைத்துச் சென்றனர். சர்க்கரையைக் கண்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். எனினும் வாடிய பயிர் போல் சிறையில் பொலிவற்ற நிலையில் காண முடியவில்லை அவ்வள்ளலை. சர்க்கரையும் இக்கட்டான சமயத்தில் வந்த புலவரைத் தன்னால் முறையாக உபசரிக்க இயலவில்லை என்று மிகவும் மனம் நொந்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சர்க்கரைக்கு ஏதோ ஞாபகம் வந்தது. தனக்குத் தெரிந்த சிறை ஏவலாளிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். சிறிது நேரம் கழித்து அவன் ஏதோ தன் கையில் மூடிக் கொணர்ந்து அவர் கையில் தந்தான். சர்க்கரை "இந்த சமயத்தில் என்னால் உதவ முடிந்தது இது தான் " என்று சொல்லி அதைப் புலவரிடம் அளித்தார்.
புலவன் அதைப் பார்த்தான். அது ஒரு பொற்றாலியாக ( பொன்+தாலிஇருந்தது. புலவருக்கு நா எழவில்லை. மயிர்க் கூச்செரிந்து. என்ன இது என்று கேட்டார். இவ்வூரில் தங்கியிருக்கும் என் மனைவிக்குச் சொல்லி அனுப்பினேன். அவள் இதை அனுப்பினாள். கழுத்தில் மஞ்சட் சரடு இருக்கிறது. இது மிகை தானே. இப்போதுதான் இது மங்கலம் பொருந்தியதாயிற்று என்று அவர் சொல்லச் சொல்லப் புலவரின் கண்களில் நீர் சுரந்து வழிந்தது. புலவர் இத்தகைய வள்ளலைச் சிறையில் அடைத்த ராமப்பையர் எவ்வளவு கல் நெஞ்சராக இருப்பார் என்று எண்ணி அவரைக் காணச் சென்றார். ராமப்பையர் கையில் பொற்றாலியைக் கொடுத்தார். அது என்ன என்று கேட்ட போது , கீழ்க்கண்ட பாடலைப் பாடினார். தன் தவறை உணர்ந்த ராமப்பையர் சர்க்கரை மற்றும் அவரோடு சிறையில் இருந்த மற்றவர்களையும் விடுவித்தார்.
அவர் மனதில் நீங்கா இடம் பிடித்த சர்க்கரை தமிழ் உள்ளளவும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறச் செய்த பாடல் இதோ.
"கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால் கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின் மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே"
அருஞ்சொற்பொருள்:
கொங்கினில் - கொங்கு + அதனில் 
கொங்கு நாட்டில் 
ராமப் பயனதி காரக் குரூரத்தினால் - ராமப்பையன் அதிகாரக் குரூரத்தினால் 
குரூரம் - கொடுமை
கங்குல் - இரவு
சங்காரம் - அழிவு
சர்வ சங்காரம் - எந்நேரமும் மக்களைத் துன்புறுத்திய பஞ்சம்
சிங்கநற் சம்பந்த சர்க்கரை - சிங்கம் போன்ற தலைவனும் மிக நல்லவனுமான சம்பந்த சர்க்கரை
தேவி - சர்க்கரையின் மனைவி
மங்கலி யந்தனைத் தந்தான் - மங்கலியம் தனைத் தந்தான்
மங்கலியம் - மாங்கல்யம் - பொன் தாலி
தமிழ்க்கவிவாணர் - கவிஞர்/ புலவர்
விளக்கம்:
கொங்கு நாட்டில், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், ராமப்பையரின் அதிகாரக் கொடுமையால் சர்க்கரை சிறையில் இருந்தார். இரவு, பகல் எந்நேரமும் துயரம். அச்சமயத்தில் தன்னை நாடி வந்த இந்த தமிழ்ப்புலவரின் வறுமை நீங்க , தன் மனைவியின் தங்கத் தாலியைக் கொடுத்தான் . என்னே அவன் கொடையுள்ளம் ! என்னே அவன் புகழ்!
Ref :
https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Friday, 15 January 2016

சீதக்காதி ( வள்ளல்கள் - 1 )

"செத்தும் கொடுத்தான் சீதக்காதி"

 சென்னையில் வெள்ளம் வந்த போது, எவ்வளவோ மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவி செய்தனர். " காலத்தினால் செய்த நன்றி " அல்லவோ அது? அதற்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்வோம்? பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்களும் சரி மக்களும் சரி தன்னலம் கருதாது வாழ்ந்தனர். உணவு, உடை, உறைவிடம் , கல்வி, செல்வம் அனைத்தும் மக்களுக்கு எட்டும் வகையில் இருந்தது. எத்தொழில் செய்வோராயினும் உண்மையாகவும் நேர்மையாகவும் , தன் தொழில் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இல்லாதவர்க்குப் பொருள் தந்து உதவுவது, பயணிகளுக்கும் அடியார்களுக்கும் தம் உறவினர் போல் கருதி உணவளித்து உதவி செய்வது இவை போன்ற செயல்களால் ,  விருந்தோம்பலுக்குப் பெயர் போனது நம் தமிழ்நாடு. அத்தகைய பெருமக்கள் வாழ்ந்து நமக்கு விட்டுச் சென்ற இயற்கைச் செல்வங்களே நம்மை இன்றும் காப்பாற்றி வருகின்றன. வழிபாட்டுத் தலங்கள் கூட வெறும் தலங்களாக அல்லாமல், கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம், அன்னதானம், கலை வகுப்புகள் அனைத்தும் நடைபெறும் இடமாக இருந்தது. அக்காலத்தில் புலவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தி மன்னர்களிடமும் செல்வந்தர்களிடமும் பரிசில் பெற்றுச் சென்றனர். அவர்களின் வருவாய் அதை மட்டுமே நம்பி இருந்தது. இவர்களை ஆதரிக்கப் பல நல்உள்ளம் படைத்த  வள்ளல்களும் இருந்தனர். நாடி வந்தவர்க்குப் பொன்னும் பொருளும் புகழும் அளித்தனர்.
அதுபோன்ற வள்ளல்களில் ஒருவர் தான் சீதக்காதி. ஒரு தமிழ் இசுலாமியர். இவரின் இயற்பெயர் ஷைகு அப்துல் காதிறு மரக்காயர். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வாழ்ந்தவர்.  பரம்பரைச் செல்வந்தர்.  மிளகு வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். சமய வேறுபாடின்றி தமிழ்ப் புலவர்களையும் ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்தவர். நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சீறாப்புராணத்தைப் பரப்பப் பெரிதும் உதவி செய்தவர்.
இவரைப் பற்றிச் சில சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உள்ளன.
ஒருமுறை, சீதக்காதி அவர்கள் காயல் நகருக்குச் ( இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல் பட்டினம் ஊராக இருக்கலாம் ) சென்ற போது, வறியவர் ஒருவர் தன் மகளின் திருமணத்திற்குப் பொருள் வேண்டினார். சீதக்காதி அவர்கள் உடனே தர முற்பட்ட போது, திருமணத் தேதி நிச்சயம் ஆன பின் பெற்றுக்ககொள்வதாகத் தெரிவித்தார். சீதக்காதி அவர்கள் அதன் பின் ஊர் திரும்பினார். சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு இறந்தார். அச்சமயம் அங்கு வந்தார் வறியவர். வள்ளல் பெருமானிடம் பொருள் பெற வந்தவர், அவர் இறந்த செய்தி கேட்டு இடிந்து போனார். அவரின் ஒரே நம்பிக்கைச் சுடரும் இறந்ததை நினைத்து , மிகவும் துயருற்றார். தனக்கு உதவ முன்வந்த பெருமானுக்கு அஞ்சலி செலுத்த எண்ணி, அவரை அடக்கம் செய்த பள்ளிவாடிக்குச் சென்றார். அமைதியாக அங்கே சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். அப்போது தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சீதக்காதி அவர்களின் வலது கரம் வெளிப்பட்டது. அதில் முத்து பதித்த மோதிரம் ஒன்று இருக்கக் கண்ட ஊர்ப் பெரியவர்கள் அதை அவரிடம் தந்தனர். இறந்த பிறகும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய சீதக்காதி வள்ளலின் பெருமையை உணர்ந்த அவர்கள் " செத்தும் கொடுத்த சீதக்காதி புகழ் வாழி " என்று கூறினர். அன்று முதல் செத்தும் கொடுத்த சீதக்காதி என்று தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார். 

படிக்காசுப் புலவர் - ( பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் ) தனிப்பாடல்
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்,
தொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் 
அனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமுமே.
சீதக்காதியின் வள்ளல் தன்மையை எடுத்தியம்பும் பாடல் இது. 

பொருள் :
மின்னார் - அழகிய பெண்டிர்
பாவாணர் -  மொழி அறிஞர்
பன்னூல் - பல நூல்கள்
தொலைவில் பன்னூல் - பிற நாட்டில் இருக்கும் நூல்கள்
சூரியகாந்திப் பூ , காய்ந்து சிவந்து. அழகிய பெண்டிரின் கண்கள் கூடும் போது சிவந்தன. மொழி அறிஞர்கள் தம் ஆய்வை விரிவாக மேற்கொள்ள பல நாட்டு நூல்களை ஆய்ந்து , அவர்கள் நெஞ்சம் சிவந்தது. ஆனால் , வள்ளல் சீதக்காதியின் இரு கரங்களும் தினமும் தன்னை நாடி வருவோர்க்குக் கொடுத்தே சிவந்தன.
இப்பாடலை உற்றுப் பார்க்கையில் கர்ணன் திரைப்படத்தில் வரும் "நாணிச் சிவந்தன நாதரார் கண்கள் " என்ற பாடல் இதை ஒட்டியே அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.

சில குறிப்பிடத்தக்க செய்திகள்

இந்தியாவின்  மிகப்பழமையான முதல் பள்ளிவாசலான பழைய ஜும்மா பள்ளி கீழக்கரையில் அமைந்துள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானது.
மற்றும் உலகின் பழமையான பள்ளிவாசல்களில் இது நான்காம் இடம் வகிக்கிறது.
சீதக்காதி அவர்களின் மகள் வழிச் சந்ததியினர் இன்றும் கீழக்கரையில் வசித்து வருகின்றனர்.

Ref :


Saturday, 9 January 2016

அன்னை - ( பகுதி - 4 )

நம் புராணங்களில், அன்னையின் தனிச்சிறப்பைப் பல இடங்களில் காண இயலும். அன்னையே தெய்வமாகவும் , தெய்வமே அன்னையாகவும் திகழ்வதோடு தெய்வங்களுக்கு அன்னையாக இருக்கும் பேறு பெற்றவர்களும் உண்டு. 

அன்னையே தெய்வமாய்

" மாத்ரு தேவோ பவ" 
என்கிறது தைத்ரிய உபநிஷதம். 

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது கொன்றை வேந்தன். 

பிள்ளையாருக்கும் முருகனுக்கும் நடந்த போட்டியில் , தன் அன்னை தந்தையே உலகம் என்று உணர்ந்து அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார் பிள்ளையார்.  

ஆதிசங்கரர் தன் தாய் இறந்த போது, அவள் பிரிவைத் தாங்காது, அன்னையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவர் இயற்றியதுதான் "மாத்ரு பஞ்சகம்". 

தெய்வமே அன்னையாய் 

உலகிற்கே அன்னையான இறைவியைத் துதிக்கும் லலிதா சஹஸ்ரநாமம்  " ஸ்ரீ மாதா " என்றே தொடங்குகிறது. இறைவியை 1000 பெயர்கள் கொண்டு துதிக்கும் போதும் அம்மா என்று தொடங்கியே அந்த அன்பு அடியவர்களிடம் நிறைந்துள்ளது. 

குழந்தை அழும் போது தாயானவள் பொறுப்பதில்லை. உடனே ஓடி வந்து அணைக்கிறாள். தன் அடியவர்களுக்கு அவ்வாறே அருள்வதால் திருமகள் தாயார் என்று அழைக்கப்படுகிறாள்.  

சம்பந்தப் பெருமான் குழந்தையாய், நெடு நேரமாய் தந்தையைக் காணாது ' அம்மே அப்பே ' என்று சீர்காழி கோவில் கோபுரத்தைப் பார்த்து அழவே, இறைவி மனம் இரங்கி ஞானப்பால் ஊட்டினாள். அன்று முதல் திருஞானச்சம்பந்தர் ஆனார்.

 அபிராமியைத் துதிக்கும்போது , ' ... உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே..... ' என்று பாடினார் அபிராமி பட்டர்.  

(அபிராமி அந்தாதி பாடல் 33)

வள்ளலார் முருகனைத்  
 ' ... தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே ... '
 தன் தாய்  என்று முருகனைக் கூப்பிடுகிறார். 

புதுவையில் பலரின் வழிகாட்டியாய் அமைந்த அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த Mother Mira ஸ்ரீ அன்னை என்றே தன் அடியவர்களால் அழைக்கப்படுகிறார். 

வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் மேரி  Mother Mary என்று ஆங்கிலத்திலும் , தூய மரி அன்னை என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். 

இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானவர் கதையை அறிந்திருப்பீர்கள் . ( தாயும் ஆனவர்) தாயும் ஆனவர் சேயாய்ப் பிறந்து தாயன்பைப் பெற விரும்பினார். அதைக் கீழே பார்ப்போம். 

தெய்வங்களுக்கு அன்னையாய் 

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளும் அம்மா என்று தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். காரைக்கால் அம்மையார் தன் கைகளாலேயே நடந்து தன்னைக் காண வந்த போது அம்மையே என்று அழைத்தார். 

மும்மூர்த்திகளான சிவன் , விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தாய் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஆசைப்பட்டனர். அந்தப் பேறு பெற்றவள் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயை ஆவாள். மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக வளர்த்து அவர்களைப் பிரிய மனமில்லாத போது, அவர்களின் அம்சமாய் தத்தாத்ரேயர் என்றவரை அளித்த பின் அனுசூயையிடம் விடை பெற்றனர். 

வெண்ணெய் திருடி, மண்ணை உண்டு ராதையின் உள்ளம் கவர்ந்த கள்வனை , வளர்க்கும் பேறு பெற்றவள் யசோதா. " என்ன தவம் செய்தனை " என்று போற்றப்பெற்றாள். 

எந்தக் கோணத்தில் நோக்கினும் அன்னை முழுநிலவைப் போன்றவள். அதன் குளிர்ந்த ஒளி போன்றது அவள் அன்பு. இருண்ட உலகிலும் இன்பம் தருவது.அன்பே ஓம் எனும் அருள் மந்திரம் என்கிறது ஸ்கந்த குரு கவசம். அந்த அன்பை நமக்கு அறிமுகம் செய்த அன்னையை வணங்கி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோம்.