Saturday, 12 December 2015

அன்னை ( பகுதி - 1 )

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன். ஒரு தாயின் சிறப்பைப் போற்ற, எவ்வளவு பாடல்கள் இயற்றினாலும் , புகழுரை தந்தாலும் எதுவும் போதாது. அவள் தன் குழந்தையைப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் இல்லை. அவர்கள் எவ்வளவு வயதானாலும் தன் அன்னைக்கு குழந்தைகள் தாம். அவள் தன்னலம் கருதாது தன் எல்லா சக்தியும் கொண்டு அக்குழந்தையை மிகச் சிறப்பாக வளர்க்க என்ன பாடு படுகிறாள் ? வள்ளுவர் ஒரு தாயின் மகிழ்ச்சி , அவள் குழந்தையைப் பெற்ற தருணத்தைவிட அவன் சான்றோன் எனப் பலரால் பாராட்டப்படும்போதுதான் பல மடங்காகிறது என்றார்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
"
- குறள் 69

அன்னையின் சிறப்பை, உயர்வை விளக்கும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உள்ளன. அவற்றில் என்னை வியக்க வைத்த பாடல்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உலகில் எவ்வளவு பெரிய சாதனைகளை நாம் படைத்தாலும் , பலபேரிடம் வாழ்த்து, ஆசி பெற்றலாலும் பல பிரபலங்களுடன் புகைப்படம், கையெழுத்து பெற்றாலும் ( photo, autograph மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது ) நம் அம்மாவிடம் நாம் பெறும் அன்பும் ஆசியும் மகிழ்ச்சியும் உலகில் எங்கும் கிடைக்காது. "..தெய்வம் பூமிக்கு வருவதில்லை, தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்... " என்ற திரைப்பாடல் வரிகள் என் நினைவிற்கு வந்தன.

கீழ்வரும் பாடல் எந்த நூலில் உள்ளது, யார் இயற்றினார் என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை. நான் என் தாத்தாவிடம் கேட்டறிந்தவாறு இங்கே எழுதியுள்ளேன். இது நந்தி கலம்பகம் நூலில் இடம்பெற்றுள்ளதாகவும் , நந்தி வர்மன் தன் தாயின் மீது எழுதிய பாடல் என்றும் அவர் கூறிய நினைவு. ஒரு பழைய குறிப்பில், எழுதி வைத்திருந்தேன். அது மீண்டும் கிடைத்தால் இந்தப் பக்கத்தை update செய்கிறேன் . இப்பாடல் பற்றிய விவரம் நீங்கள் அறிந்தால் இங்கே பகிரவும்.

கருவூரில் இருந்த நாள் முதல் 
கண்ணடக்கி வாயடக்கி வயிற்றைக் கட்டி 
ஈரைந்து மாதங்கள் சுமந்துப் பெற்று, 
வட்ட நிலாச் சந்திரனைச் சுட்டிக்காட்டி, 
வடித்தெடுத்த நெய் சோற்றைப் பிசைந்து ஊட்டி, 
பொற்தொட்டிலில் இட்டு, சின்னஞ்சிறு தாலாட்டுப்பாட்டுப் பாடி, 
முலைக்குடத்தில் சுரந்து வந்த அமுதை ஊட்டி, 
பொட்டிட்டு, பூணுமிட்டு, பட்டாடை பல உடுத்தி அழகு பார்த்து , 
சிரித்தால் உடன் சேர்ந்து சிரித்திட்டு, 
அழுதால் உடல் நொந்து அழுது பின்னர், ....
என்னை வாழ்க வாழ்க என்று வையத்தில் வாழ வைத்த அன்பு நிறை அம்மா


அருஞ்சொற்பொருள் :
கண்ணடக்கி - கண் + அடக்கி
தூக்கம் தொலைந்து
வாயடக்கி வயிற்றைக் கட்டி- வாய்+ அடக்கி
உணவில் குழந்தைக்கு எது சேருமோ அதை மட்டும் உண்டு, தனக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் வாயை அடக்கி
ஈரைந்து - இரண்டு x ஐந்து - ( 2 x 5 = 10 )
பத்து மாதங்கள் சுமந்து
பொற்தொட்டில் - பொன் + தொட்டில் .
பூண் - அரச மரபினர் மார்பில் அணியும் கவசம் போன்ற அணிகலன்
பூணுமிட்டு - பூணும் + இட்டு
பட்டாடை - பட்டு + ஆடை
தங்கத் தொட்டில், பூண், பட்டாடை போன்ற குறிப்புகளால் , இப்பாடலை இயற்றியவன் அரசனாகவே இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

விளக்கம் :

என்னை கருவில் இருந்த காலத்தில் இருந்தே கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, எனக்காக உன் மகிழ்வைத் தொலைத்தவளே. என்னைப் பெற்று, சீராட்டி பால் ஊட்டி வளர்த்தவளே. தொட்டிலில் இட்டு, தாலாட்டி, தாய்ப்பால் கொடுத்து , நிலாவைக் காட்டி நெய் சோறு ஊட்டியவளே. எனக்குப் பொட்டு வைத்து, பூண் அணிவித்து பட்டாடை உடுத்தி அழகு பார்த்தாய். நான் அழுத போது நீயும் உடன் சேர்ந்து அழுது, நான் சிரித்த போது நீயும் சிரித்து என்னுடனேயே நீ இருப்பதை உறுதி செய்தாய். என்னை வாழ்க வாழ்க என்று இவ்வுலகில் வாழ்த்திய அன்னையே என்று ஏங்குகிறான். அவன் தாய் இறந்த போது அவளின் பிரிவால் இதை எழுதியிருக்கலாம்.

 Ref :

Aathichoodi

thirukkural - 69

poon - wiki


3 comments:

  1. Touching article!

    You have a flair for Tamil & impressing your subscribers!

    Hemalatha Parameshwaran

    ReplyDelete
  2. Nice article, Iswarya

    Regards,
    Stella Mary

    ReplyDelete
  3. Thanks for reviving my interest in tamiz

    ReplyDelete