Tuesday, 1 December 2015

பிசிராந்தையார் ( இறவாப்புகழ் - 3 )

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்பு பூண்டிருந்தனர்.
ஆந்தையார் என்பது அப்புலவரின் பெயர் . அவர் பாண்டிய நாட்டில் "பிசிர்" என்ற ஊரில் , வாழ்ந்தார் . ஆதலால் "பிசிராந்தையார்" என்றழைக்கப்பட்டார் . சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்தான் . இருவரும் தொலைவில் உள்ளதால், ஒருவரை ஒருவர் காண இயலவில்லை. என்று காண்போம் என்று அந்நாளை நோக்கிக் காத்திருந்தனர் . ஆனால் விதி வேறு விதமாய் இருந்தது. ஓர் கறுப்பு நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்களும் , ஆட்சியைப் பெறச் சண்டையிட்டனர் . இந்த உட்பூசல்களினாலும் பல்வேறு மனக்கசப்புகளாலும் ஆட்சியைத் துறந்து வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான் . அவ்வாறு செல்கையில் , தான் வடக்குத் திசையில் உண்ணாநோன்பிருக்கும் இடத்திற்கு அருகிலேயே மற்றொரு ஆசனம் அமைக்கச் சொன்னான் . " என்னைத் தேடி நிச்சயம் பிசிராந்தையார் வருவார். அவரை இவ்விடத்திற்கு அழைத்து வாருங்கள் " என்று சொல்லிப் புறப்பட்டான் .
அவன் வடக்கிருப்பதைக் கேள்வியுற்றப் பிசிராந்தையார் அவனைத் தேடி வந்தார் . ஆனால் அதற்குள், சோழனின் உயிர் பிரிந்துவிட்டது. அவரைக் கண்ட சோழனின் மகன் , " தாங்கள் வருவீர்கள் என்று தந்தை கூறினார். அவர் நண்பர் என்பதால், தாங்கள் முதியவராக இருப்பீர்கள் என்று எண்ணினேன். ஆனால் தாங்கள் இளமையாகக் காட்சி அளிக்கிறீர்களே ! " என்று கூறினான். அதற்கு அவர் அளித்த விடையை இன்னொரு பதிவில் (in  another post ) விரிவாகச் சொல்கிறேன் . பின்னர், பிசிராந்தையாரை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். தன் ஆருயிர் நண்பன் விட்டுச்சென்ற இடத்தில் தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். "நீ இல்லாத உலகத்திலே" என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது. அவரும் அவ்வாறே எண்ணினார் போலும்.
உயிர் நண்பர்கள் இருவர் இவ்வாறு தொலைவில் இருந்து காணாமல், இறுதியில் பிரிவால் ஒன்று சேர்ந்தனர் என்று இந்நிலையை எண்ணி பிசிராந்தையார் இறக்கும் போது ஒரு புலவர் பின்வரும் பாடலை இயற்றினார் .
பாடல் இடம்பெற்ற நூல் : புறநானூறு
பாடல் எண் : 218
இயற்றியவர் பெயர் :  கண்ணகனார்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
அருஞ்சொற்பொருள்
பொன் - தங்கம்
துகிர் - பவளம்
மன்னிய மாமலை - இடம்பெயராத நிலையான பெரிய மலை
பயந்த - தந்த
காமருமணி - காமர் + மணி
விரும்பத்தக்க மாணிக்கம்
மலைகள் தரக்கூடிய மாணிக்கம்
சேய - தொலைவில்
இடை படச் சேய ஆயினும் - ஒவ்வொரு பொருளும் தோன்றும் இடங்கள் தொலைவில் இருந்தாலும்
தொடை - விரைவாக , தொடுத்தல்
புணர்ந்து - சேர்ந்து
அருவிலை - விலைமதிப்பற்ற (அருமையான)
நன்கலம் - நல்ல ஆபரணம்
அமைக்கும் காலை - அமைக்கும் போது
தோன்றியாங்கு - தோன்றி + ஆங்கு ( அங்கே )
ஒரு வழித்தோனறியாங்கு என்றும் - ஒரே வழியில் அங்கே தோன்றியவை போல
சான்றோர்
சான்றோர் பாலர் ஆப - சான்றோர் மற்ற சான்றோர் வழியே செல்வர் , அவர்கள் துணையே விரும்புவர் , அவர்கள் பக்கமே செல்வர்.
சாலார் - சான்றோரின் எதிர்ப்பதம் . பண்புகள் இல்லாத கீழ்மக்கள்
சாலார் சாலார் பாலர் ஆகுபவே - கீழ் மக்கள் கீழ் மக்களையே சேறுவர்
விளக்கம்
மண்ணிலிருந்து கிடைக்கும் விலையுயர்ந்த தங்கம் , பவளம், கடலிலிருந்து கிடைக்கும் முத்து, மலையிலிருந்து கிடைக்கும் மாணிக்கம் போன்றவை வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் அவற்றைக் கோர்த்து மாலையாகச் செய்யும் போது அது இன்னும் ஒப்பற்றதாகிறது. அதன் ஒப்பற்ற தன்மை மூலம் , அவை ஒரே இனத்தில்/இடத்தில் தோன்றியது போல் வேறுபாடின்றிக் காட்சியளிக்கிறது. அதே போல் சான்றோர்கள் ( இங்கு கூறப்படுவது பிசிராந்தையைர் மற்றும் கோப்பெருஞ்சோழன் ) வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் " இனம் இனத்தோடு சேரும் " என்பது போல அவர்கள் பிற சான்றோர்களோடு இணைவதையே விரும்புவர். கீழ்மக்கள் கீழ்மக்களையே சேர்வர்.
இங்கு, சான்றோர் உயிரையே விட்டாவது இணைய விரும்புவர் என்பது மறைபொருள். இத்தகைய சான்றோரின் இணைப்பையே ஔவையும் மூதுரையில் , "கற்றாரைக் கற்றாரே காமுறுவர் " என்று பாடினார் . இவர்களின் நட்பையா, உயர் பண்பையா இறந்து பெற்ற இறவாப்புகழையா , இவர்களை இணைபிரியாமல் வைத்த தமிழையா எதை நாம் வியப்பது என்று புரியவில்லை.

Ref : 








8 comments:

  1. Awesome post, well elucidated. You have a good knack for writing series.

    Malarkodi

    ReplyDelete
  2. Well explained! Simply delightful.

    Wishes,
    R. Bhavani

    ReplyDelete
  3. Nice article, well written.

    Regards,
    D. Nithila

    ReplyDelete
  4. You have a spark to kindle interest in Tamil.
    In case u or ur family are in coastal TamilNadu region, hope all of u are safe.

    Ezhil.

    ReplyDelete
  5. Thanks for the article. Right from the introduction to the reference section, its rich and well written,

    Hope you are safe, if in Chennai.

    Stella Mary

    ReplyDelete
  6. hi all jus got internet connection. Received mails from all of you. Thank you for your concern. We are safe.

    Iswarya

    ReplyDelete
    Replies
    1. Glad to note the same.

      Wishes,
      R. Bhavani

      Delete
  7. Take care. Keep up your good work!

    ReplyDelete