ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்த அன்னையே அவன்/அவளுக்கு தீங்கு நினைப்பதுண்டோ? இல்லை. அது மிக மிக அரிது. இருந்தாலும் அது அறியாமையால் செய்யும் பிழையாக இருக்கலாம்.
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகி விடாது
இராமாயணத்தில் தசரதனின் வேள்விப்பயனாய்ப் பிறந்த நால்வருள் இராமன் கோசலைக்குப் பிறந்தவன் . பரதன் கைகேயிக்கு பிறந்தவன் . கைகேயி கூனியின் சூழ்ச்சியால், இளையவன் பரதன் நாடாளவும் , இராமன் கானகம் செல்லவும் தசரதனிடம் வரம் கேட்டுப் பெற்றாள். இராமனுக்கு இச்செய்தியை அவன் திருமுடி சூட்டும் விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் தெரிவிக்கிறாள். இராமன் கைகேயியிடம் பின்வருமாறு கேட்பதாகக் கம்பர் விவரித்துள்ளார்.
கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - பாடல் 1600
‘எந்தையே ஏவ, நீரே
உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்
பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
தலைநின்றேன்; பணிமின்’ என்றான்
உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்
பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
தலைநின்றேன்; பணிமின்’ என்றான்
அருஞ்சொற்பொருள்
எந்தை - என் + தந்தை , தசரதன்
நீர் - இங்கு கைகேயியைப் பார்த்து இராமன் பேசுவதால் கைகேயியை குறிக்கும்
இயைவது - ஒப்புக் கொள்வது
பணிமின் - கட்டளையிடுங்கள்
விளக்கம்
என் தந்தை தசரதன் கட்டளையிட, அதை என்னிடம் கூற நீங்களே ஒப்புக்கொண்டு என்னை அழைத்தீர்கள். ஆதலால் நான் உயர்ந்தவன் ஆனேன். என்னைக் காட்டிலும் இந்த சிறப்பைப் பெற பிறந்தவர்கள் எவரேனும் உண்டோ? இல்லை. நான் முன் செய்த தவத்தின் பயன் வந்துவிட்டது. இதை விடச் சிறந்தாக இனிமேல் வரக்கூடிய பயன் ஒன்றும் இல்லை. எனக்கு நன்மையைச் செய்யும் தந்தையும் தாயும் நீங்கள் தான் . கட்டளையிடுங்கள் . நீங்கள் சொல்வதைத் தலைமேற்கொண்டு செய்யக் காத்திருக்கிறேன் என்று இராமன் கூறினான்.
இத்துடன் கம்பர் நிறுத்திவிடவில்லை. அந்தக் கட்டளையை இராமன் கேட்ட பிறகு , அவன் முகம் எப்படி ஆயிற்று என்றால் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் புதிதாய் தெளிவாய் இருந்ததாம். அதையும் வென்றுவிட்டது என்றே கூறுகிறார். அதைக் கேட்பதற்கு முன்பும் பின்பும் ஒரே போல் அவன் முகம் இருந்தது. கைகேயியின் வரம் நமக்கு கல்நெஞ்சத்தின் கட்டளை போல் இருந்தாலும் இராமன் அதைத் தன் தாய், தந்தை இருவரது அருளும் கொண்ட கைகேயியின் அருள் வாக்காக எண்ணினான். அதுவே தன் தவப்பயன் என்றும் உணர்ந்து முன்னை விடவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கானகம் செல்ல ஆயத்தமானான்.
" மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே " என்று கோசலைக்குத் தான் பிறக்கும் போது புகழ் தேடித் தந்தவன், கானகம் செல்லும் கட்டளையை அறிந்த பின், கைகேயிக்கும் புகழாரம் சூட்டுகிறான். இராமன் தன் தாய் , தந்தை மீது கொண்ட பணிவும் அன்பும் நம்மை வியக்க வைக்கின்றன.
கைகேயி கல் நெஞ்சம் படைத்தவள் போல இருந்தாலும், இராமர் ஒரு வண்ணான் சொல்லுக்காக சீதையை அக்னிக்குள் இறங்குமாறு பணிப்பதும் இராமாயணத்தில் தீவினைகள் போல் தோன்றினாலும் இவற்றின் பின்னணியில் இருக்கும் நல்வினையை உணர்ந்து, தெரிந்தே இவை நடந்தன என்று அபூர்வ இராமாயணம் சொல்கிறது.
Ref :
Good one, Iswarya. Seems you have stopped writing these days?
ReplyDeleteWishes,
R. Bhavani