Sunday, 13 December 2015

அன்னை ( பகுதி - 2 )

என்னைக் கவரந்த தமிழ்த்துறவிகளில் முதன்மையானவர் பட்டினத்தார். இவர் பாடல்களும் இவருடைய வரலாறும் தத்துவங்களும் மிகவும் சுவையானது. இவருக்கென்றே ஒரு தொடர் எழுத நான் விழைந்தாலும் தற்போதைக்கு இவர் அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடலை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
கைப்பொருளும் மெய்ப்பொருளும் நிரம்பிய குடும்பம் அவருடையது. " தெளிவே வடிவாம் சிவஞானம் " என்று பாரதி பாடிய சிவஞானம் சிந்தையில் உரைத்தபோது துறவறம் பூண முடிவெடுத்தார். அதற்கு முன் அன்னையிடம் ஆசி பெறச் சென்றார். பட்டினத்தாரின் அன்னை பெயர் ஞானகலை. அவர் பட்டினத்தாரின் இடுப்பில் ஒரு துணிப்பையைக் கட்டினார். அது அவிழும் போது அவர் தன்னைக் காண வரவேண்டும் என்றும் அதுவே அவளின் இறுதிக்காலம் என்றும் கூறினாள். காலங்கள் சென்றன. அவரும் துறவியாய் வாழ்ந்து சிவநெறி வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் திருவிடைமருதூரில் இருந்த போது, அந்தப் பையின் முடிச்சு அவிழ்ந்தது. தன் தாயைப் பார்க்க விரைந்தார். அவர் வரும் வரை அவள் உயிர் காத்திருந்தது. அவர் கைகளிலேயே உயிரிழந்தாள். அன்னையின் பிரிவை ஆற்ற இயலாது துடித்தார். அவள் உடல் விறகிலிட்டால் துன்புறுமோ என்று உருகி, வாழைமட்டைகளை அடுக்கி , அதன் மேல் இட்டார். கீழ்வரும் பாடலைப் பாடினார். அவை தீ பற்றி எரிந்தன.
முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே
அருஞ்சொற்பொருள்  :
முன்னை - முன் புறம் , நெற்றிக்கண்
முப்புரம் - மூன்று மலைகள் . அசுரர்கள் மூவர் பொன்,வெள்ளி, இரும்பு ஆகிய மலைகள் அமைத்து அனைவரையும் துன்புறுத்தினர். அவற்றைச் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.
பின்னை - பின் புறம், வால் பகுதி
அனுமன் இலங்கையில் தன் வாலால் தீ வைத்தான்
அன்னை தன்னைக் கருவில் தாங்கிய வெப்பம் - அடிவயிற்றுத்தீ
யானுமிட்ட தீ - அவர் இறுதியாக தாயின் உடலுக்கு வைக்க வேண்டிய தீ
மூள் - தீ எழும்புவது
விளக்கம் :
முப்புரங்களை முன் இருந்த நெற்றிக்கண் தீயால் சிவன் எரித்தான். இலங்கையை பின் இருந்த வாலின் தீயால் அனுமன் அழித்தான். அவ்வரிசையில் என் அன்னையோ அடிவயிற்றிலே உள்ள தீ கொண்டு என்னைத் தாங்கினாள். இறுதியாக நானும் இட்ட தீ இதுதான் என்று பொருள் தருகிறது. மூள்க என்று தீயிற்கே கட்டளை இடுகிறார்.
தன் தாயின் அடிவயிற்றின் வலியை, தன்னை ஈன்று வளர்த்த இறைவியை அந்நிலையில் அவரால் காண இயலவில்லை. அவர் பாடல் அக்னி பகவானையே சுட்டுவிட்டது போலும். அப்பிரிவை அம்மட்டைகளாலும் தாங்க இயலவில்லை. நாம் ஏன் இன்னும் இருக்க வேண்டும் என்று அவை எண்ணின என்று தோன்றுகிறது.  அவ்வாழை மட்டைகள் பற்றி எரிந்தன.

Ref : 



4 comments:

  1. Good work , Iswarya...

    You give a glimpse of the vista of Tamil literature to us.

    Malarkodi

    ReplyDelete
  2. Good post, Iswarya.

    Wishes,
    R. Bhavani

    ReplyDelete
  3. Valuable information. Please continue this. Bhuvana

    ReplyDelete