Sunday, 6 December 2015

நந்திவர்மன் ( இறவாப்புகழ் - 4 )

" நான் உனக்காக உயிரையே கேட்டாலும் தருவேன் " என்று திரைப்படங்களில் கேட்டிருப்போம் . ஆனால் , உண்மையாக அவ்வாறு உண்டா ? என்று கேட்டால் உண்டு என்று தான் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன. இயற்கைப் பேரிடரில் உயிரிழப்போர்கள் உண்டு. ஆனால் இயற்கையே அவன் வாழ்வை அவன் கையில் அளித்த போதும் , தேவையில்லை என்று மறுத்துவிட்டான் நந்திவர்மன். ஏன் ? உயிரை விட மேலான ஒன்றுக்காக .. என்ன அது?

மூன்றாம் நந்திவர்மன் என்பவன் ஒரு பல்லவ அரசன். இவன் தன் உயிர் விட்ட கதையை நந்தி கலம்பகம் என்ற நூல் மூலம் அறிகிறோம். கலம்பகம் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலப்பு + அகம் - அதாவது பல்வகையான செய்யுட்களைக் கலந்து தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பெயர். பல்வகையான பூக்களைக் கொண்ட மாலை கதம்பம் எனப்படும் . அதுவே திரிந்து கலம்பகம் என்றானது என்று கூறுவாரும் உண்டு. மற்றொரு பொருள் : கலம் - 12 , பகம் - அதில் பாதி -6 = 12 + 6 = 18, 18 உறுப்புகளைக் கொண்ட இலக்கிய வகை. இந்தக் கலம்பக நூல்களில் , காலத்தால் முதன்மையானது நந்தி கலம்பகம் ஆகும் . இது பல்லவ மன்னன் 3ஆம் நந்தி வர்மன் மேல் இயற்றப்பட்டது.

இந்நூலின் பின்னணியில் பல கதைகள் இருந்தாலும், நான் பின்வரும் கதையே சரியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன் . என் தாத்தா என்னிடம் கூறியதும் இதுவேயாகும்.
நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்கு 4 புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் நந்தி வர்மனை தோற்கடிக்கப் பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. அவர்களுள் ஒருவர் புலவர் . அவர் பெயர் காடவர் என்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர் அறம் வைத்துப் பாடுவதில் வல்லவர். அறம் வைத்துப்பாடுதல் என்பது ஒருவரைப் புகழ்வது போல் வெளிப்படையாகத் தோன்றினாலும் , அவரை இகழ்ந்து அவர்களை எதிரியாய் நினைப்பவர்கள் வசை பாடுவது திட்டுவது போல் இருக்கும். அவர் அழிய வேண்டும் என்பதே பாடலின் நோக்கம். அறம் பாடுதல், அறம் வைத்துப் பாடுதல், வசை பாடுதல் எனப் பல்வேறு பெயர்களில் இது வழங்கப்படுகிறது.


இப்புலவர் நந்தி வர்மன் மேல் நந்தி கலம்பகம் இயற்றினார் . அவர் ஒரு கணிகையுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவளிடம் இப்பாடல்களை சொல்லிக்கொண்டிருப்பார். அவளும் இதைப் பாடிக்கொண்டிருந்தாள். அவர் பின்னாளில், மனம் திருந்தி துறவறம் பூண்டார். ஒருநாள் அந்தப் பெண் நந்திக் கலம்பகப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள். அதைத் தற்செயலாகக் கேட்ட காவலர்கள் அதில் தம் மன்னர் பெயர் இருக்கவே, மன்னரிடம் தெரிவித்தனர். உடனே அரசன், அப்பெண்ணை அழைத்து விவரம் அறிந்தான் . அதைப் பாடிய புலவரை வரவழைத்தான். இப்பாடல்களில் இருக்கும் தமிழ் அமுதை முழுவதுமாகக் கேட்க விரும்பினான். ஆனால் , புலவர் உண்மையைக் கூறி இப்பாடல்களை நீங்கள் கேட்டால் உயிரிழப்பீர்கள் நான் அவற்றை முழுமையாக இயற்றவில்லை. வேறு ஒருவருக்கு விற்று விட்டேன் என்றான் . அரசன் அதனால் பரவாயில்லை நான் கேட்க விரும்புகிறேன் என்று கட்டளையிட்டான். புலவர் எவ்வளவோ மறுத்தும் நந்தி வர்மன் விடவில்லை. பின்னர் புலவர் கூறியவாறே ,சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பந்தல் எரிந்தது. இறுதியாக, கீழ் வரும் பாடலை , நந்தி வர்மன் ஒரு பந்தலின் கீழ், விறகுகள் அடுக்கப்பட்டு ( ஈமச் சடங்கு போல் ) அதன் மேல் அமர்ந்து கேட்டான். பாடல் முடிவில் விறகுகள் தீப்பற்றி எரிந்தன. நந்தி வர்மன் உடல் எரிந்து சாம்பலானது.


இதன் பாடல் எண் 100 அல்லது தனிப்பாடல் 21 என்று இருக்கக்கூடும் . இது இணையத்தின் செய்தி.

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"


அருஞ்சொற்பொருள் :

வானுறு - வான் + உறு
மதி - நிலவு
வானில் இருக்கும் நிலா
வதனம் - முகம்
மறிகடல் - பொங்கும் அலைகள் கொண்ட கடல்
கானுறு - கான் + உறு
கான் - காடு
கானுறு புலி - காட்டில் வாழும் புலி
கற்பகம் - வேண்டுபவற்றைத் தரும் மரம்
தேனுறு - தேன் + உறு
தேனுறு மலராள் - தேனை உடைய தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகள் - லக்ஷ்மி
அரி - திருமால், ஹ (ha) ரி என்ற வடசொல்லில் ஹ திரிந்து 'அ' என்றானது.
தேகம் - உடல் , செந்தழல் - தீ

விளக்கம் :

ஒருபொருள் :


நந்திவர்ம மன்னனே, நிலா மட்டுமே உன் முகம் போல் ஒளி வீசக்கூடியது. மற்றவை எல்லாம் வீண் . கடல் மிக ஆழமானது. அது வரை , உன் புகழ் பரவியுள்ளது. உன் வீரம் காட்டிலுள்ள புலி முதற்கொண்டு அறியும். புலிக்கு மட்டுமே உன் வீரம் உண்டு. கற்பக மரம் போல் ஆனது உன் கைகள். உன் கொடைத்தன்மை கற்பக மரத்திற்கு மட்டுமே உண்டு. திருமகளை விடவும் உன் செல்வம் இங்கு அதிகம் இருப்பதால், அவள் தன் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டாள். செந்தழல் போல் உன் உடல் ஒளிர்கிறது ( தேஜஸ் ) .

இப்படி உன் வீரம், புகழ், கொடை, செல்வம் என அனைத்தும் ஒப்புவமையற்றுத் திகழ்கின்றன. இவையே எங்கும் பரவி நிற்கின்றன. இதில் , நானும் என் விதியும் எங்கு செல்வது ? எங்களுக்கு ஏது இடம் என்று புகழ்வது போல் உள்ளது. இங்கு மன்னனின் ஒவ்வொரு பண்புக்கும் அதற்கான உவமை கூறப்பட்டுள்ளது. அதற்கான உவமேயம் ( உவமிக்கப்படும் பொருள்) என்று எண்ணும் போது,அதற்குத் தகுதி பெறுபவன் உலகில் நந்தி வர்மன் ஒருவனே ஆவான் என்பது போல் அமைந்துள்ளது. சான்றாக, கொடைத்தன்மைக்கே உரியது கற்பக மரம் . அதைத் தவிர வேறு என்ன கூற முடியும் என்றால் நந்தி வர்மனின் கைகளாம் . கற்பக மரத்தை விடுத்து, இவன் கைகளை கொடைக்கு உவமையாக்கிவிட்டார்.

மற்றொரு பொருள் :

ஒருவர் இறந்தால் , அவர் இறைவன் அடி சேர்ந்தார் என்று கூறுகிறோம் . இங்கு மன்னனும் அவனுக்கு உரியவையும் எங்கு சேர்கின்றன என்று புலவர் கூறுகிறார்.

நந்திவர்ம மன்னனே , உன் முகம் நிலவை அடைந்து விட்டது ( நந்தி இவ்வுலகில் இல்லை - உயிருடன் இல்லை) . உன் புகழ் கடலுக்குள் சென்றுவிட்டது ( உன் புகழ் ஆழ்கடலில் மூழ்கி அழிந்து விட்டது ) . உன் வீரம் புலியை அடைந்தது. கொடை அளித்த உன் கைகள் கற்பக மரத்தை அடைந்தது. இதுவரை உன்னுடன் இருந்த செல்வம் , அதன் வடிவாய் உன் நாட்டில் இருந்த திருமகள் அதை விட்டு நீங்கி அரியிடம் சென்றாள் . உன் உடல் தீயை அடைந்தது. இப்படி அனைத்தையும் இழந்து, உன்னையும் இழந்த பின் நானும் என் விதியும் எங்கு செல்வது என்று நந்திவர்மனைப்பார்த்து புலவர் கேட்பது போல உள்ளது.

இது நடக்கும் என்று அறிந்தே, தன் உயிரினும் மேலான தமிழைக் கேட்டு இன்புறவே உயிர் நீத்தான். தமிழின் உயிர்மெய்க்கு தன் உயிர்மெய் தந்தவன் இவன் தானோ!! என்ன பேறு பெற்றாய் தமிழே!!

நந்திவர்மனும் சொல்லாற்றலும்

இங்கு சொற்களின் ஆற்றலை கவனித்தால், ஒரு உண்மை புரியும் . "இனிய உளவாக இன்னாத கூறல்" என்ற வள்ளுவர் வாக்கும்,"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்ற திருமூலர் வாக்கும் வெறும் மேற்கோள்கள் அல்ல. அவை முற்றிலும் உண்மை. தீய சொற்கள் தீயவற்றைத் தருகிறது என்றால் நற்சொல் நல்லவற்றையே தரவேண்டும். இதற்கு செல்வத்துள் தலையாய செவிச்செல்வம் விரும்பிய நந்திவர்மனே சான்றாவான். இதில் வியக்க வைக்கும் வரலாற்றுச் செய்தி பல்லவ அரசர்கள் தமிழ்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களின் தாய் மொழி தமிழன்று.


Ref :

Kalambagam - Wiki
NandiKalambagam - Wiki
interestingtamilpoems - blog
Thinnai.com
solvanam.com
valaitamil.com
vaanvaasi - blogspot
poornachandran.com
aram paaduthal - Wiki
Nandivarman III - Wiki

5 comments:

  1. Awesome as always.
    Thanks for this historical, literary & philosophical article.

    Wishes,
    R. Bhavani

    ReplyDelete
  2. Nice to see you back in action after floods.

    Keep up the good work.

    Stella Mary.

    ReplyDelete
  3. Good article about a royal soul and his love for his mother tongue.

    Regards,
    Ezhil

    ReplyDelete
  4. Good narration and formatting.

    Regards,
    Malarkodi

    ReplyDelete
  5. Are these kind of poems also related to Irraturaimozhidal class of poems?
    Just wondering.

    Nice post!

    Regards,
    Selvaragahavan

    ReplyDelete