Thursday, 19 November 2015

சபாஷ்! சரியான போட்டி!

காலை நேரம். புகை மண்டலமும் , ஒலிப்பான் சத்தமும், அனைத்து வித வண்டிகளும் ஓடும் சாலை. நீங்கள் உங்கள் வண்டியில் செல்கிறீர்கள். அலுவலகத்தை 20 நிமிடத்துக்குள் அடைய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு. அதே குறிக்கோளுடன் செல்லும் பிற மக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உங்கள் முன். இந்தப் பரபரப்பில், நீங்கள் ஆட்டோவை இடித்துவிட்டீர்கள்.

அய்யய்யோ! உங்களை எப்படியெல்லாம் திட்டியிருப்பார் . நீங்கள் சென்னைவாசி என்றால் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நினைக்கவே பொறுக்க முடியவில்லை. அதுவும் நம் தாய் மொழியின் சுடுசொற்கள் தாம் . "மூதேவி கழுதை ..... " இப்படி அந்த ஓட்டுநருக்கு வந்த கோபம் போல , ஒரு சமயம் நம் ஔவைப் பாட்டிக்கு வந்துவிட்டது.

ஒருமுறை ஔவையை அவமதிக்க எண்ணிய கம்பர், ஔவையை ஆரைக்கீரைக்கு ஒப்பிட்டு, கீழ்வரும் புதிரைக் கேட்டார்.

" ஒரு காலடி, நாலு பந்தலடி"

நான்கு இலைகள் கூரை போல் வேயப்பட்டு, ஒரு அடிப்பகுதி கொண்ட ஆரைக்கீரை அவ்வாறு காட்சியளிக்கும். இங்கு "டி" என்று ஔவையை நோக்கி ஒரு பெண்ணை அவமதிக்கும் சொல்லைப் பயன்படுத்தினார் கம்பர்.

ஔவைப்பாட்டி அதற்கு ஒரு அருமையான பாடலை விடையாகப் பாடினார்.

" எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேற் கூரையில்லா வீடே,
குலராமன் தூதுவனே , யாரையடா சொன்னாயடா?"


இதை அப்படியே நம் பேச்சு வழக்கில் சொன்னால்,

"மொகரகட்ட,எரும மாடு, மூதேவி, கழுதை, குட்டிச்சுவர்,குரங்கு,யாரடா சொல்ற நாயே " என்பதுதான் பொருள். "டா" என்று பதிலடி கொடுத்தார் ஔவை. இதன் உட்பொருளை சிந்திப்போமா?

"எட்டேகால் லட்சணமே" - நாம் கண் மை இடுகிறோம். அது கொஞ்சம் அதிகமாகிவிட்டாலும், அழகைக் கெடுத்துவிடுகிறது இல்லையா?. அதுபோல், லட்சணங்கள் 8 வகை உண்டு. எட்டேகால் லட்சணம் ( 8 - 1/4 கூடுதல்) என்பது இங்கு அவலட்சணத்தைக் குறிக்கிறது. மற்றும், 8 தமிழில் 'அ' என்றும் 1/4 'வ' என்றும் குறிக்கப்பெறும். ஆகையால், 8 1/4 - 'அவ' லட்சணம் ஆகும்.

"எமனேறும் பரியே" - பரி என்றால் குதிரை. ஆனால் , இங்கு எமனேறும் பரி என்றால் எமன் ஏறி வரும் எருமை மாடு என்று பொருள்.

" மட்டில் பெரியம்மை வாகனமே " - பெரிய அம்மை - அதாவது மூத்த சகோதரி- அக்கா - திருமகளின் அக்கா மூதேவி - மூதேவியின் வாகனம் கழுதை.

"முட்டமேற்கூரையில்லா வீடே" - முட்ட மேற்கூரை இல்லாத வீடு - குட்டிச்சுவர் என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" - ராமனுக்காகத் தூது சென்ற அனுமார். அதாவது, குரங்கு.

"யாரையடா சொன்னாயடா" - "யா" தமிழில் "ஆ" என்று குழந்தைகளிடம் சொல்வதுண்டு , " ஆனை ஆனை அழகு ஆனை" என்பது போலாகும்.

"யாரையடா "- யாரையடா அவமதித்துச் சொல்கிறாய் என்று கேட்பது போலவும்,

"ஆரையடா "- அது ஆரைக்கீரையடா என்று புதிருக்கு விடை சொல்வது போலவும் அமைந்துள்ளது.

"சொன்னாயடா " - சொன்னாய் என்றும், சொன்ன + நாய் என்றும் பொருள்படும்.
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? 


Reference :

Thamizharukkaaga - Blog

Avvaiyar Thanippaadalgal - Wiki

Dinakaran Archive

Ettegaal Latchanam - Wiki

Naiyandi - Wiki

4 comments:

  1. Very nice article. Thanks for sharing this.

    Malarkodi.

    ReplyDelete
  2. Your title made me expect some political commentaries, but you didn't disappoint me either. Nice flow and narration of our old literature - Raman.

    ReplyDelete
  3. Aptly written.
    Good sense of Tamil & also narration style.


    Wish you all the best.
    Sreeram

    ReplyDelete
  4. அருமை ஐயா. 40 வருடங்கள் பின்னோக்கி பயணிக்க செய்து விட்டீர்கள். 40 வருடங்களுக்கு முன் கிராமத்து வீட்டில் எனது பாட்டியார் சொல்லிக் கொடுத்தார். நன்றி. வாழ்க தமிழ் . வளர்க தமிழகம்.

    ReplyDelete