Thursday, 19 November 2015

நளபாகம் - ( நளவெண்பா - 1 )

நாம் திருமண விருந்துகளில், நளபாகம் என்று குறிப்பிட்டு, உணவு தயாரிப்போரின் தலைவர் பெயரை எழுதுவதைப் பார்க்கிறோம்.யார் நளன்? அது என்ன நளபாகம் ? மகாபாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்று நள சரிதம். இதன் தலைவன் நளன், நீதி வழுவாமல், நிடத நாட்டை ஆண்டு வந்தான்.இவன் சமையல் கலையில் வல்லவன். ஆதலால் தான் " நள பாகம்" என்றானது.

நள சரித சுருக்கம் : 

நளன், விதர்ப்ப நாட்டை ஆண்ட பீமன் மகளான தமயந்தி மேல் காதல் கொண்டு சுயம்வரத்தில் அவளை மணந்தான். அது பொறுக்காத கலி நளன் தமயந்தியைப் பிரிக்க எண்ணித் தன் வேலையைக் காட்டினான். நளன் தன் சகோதரன் புஷ்கரனிடம் சூதாடி, அனைத்தையும் இழந்தான்.

தமயந்தி அவன் மீண்டு வரும் வரையில் தன் குழந்தைகளுடன் தந்தையுடன் விதர்ப்ப நாட்டிலேயே இருந்தாள். பின்னர் , நளன் இழந்ததை மீட்டு எவ்வாறு தமயந்தியை அடைந்தான் என்பது வரலாறு கூறும் கதை.

நளனும் தமிழும் 

இந்த நளன் சனி தோஷம் நீங்க வழிபட்ட தலமே திருநள்ளாறு ஆகும். மேலும் , இந்த நளசரிதம் படிப்பவர்களை சனி பாதிப்பதில்லை என்று புராணம் சொல்கிறது. இந்த நளன் கதையைத் தமிழில் மிக அழகாகப் பாடியவர் புகழேந்தி. அவர் இயற்றியதன் பெயர் " நளவெண்பா" ஆகும். அக்காலத்தில் இயற்றப்பட்ட செய்யுட்களுக்கென்று சில மரபுகள்,விதிகள் இருந்தன. அவை அனைத்தையும் பின்பற்றியே அப்படைப்புகளும் இருந்தன. கதை, கதை மாந்தர் தவிர கடவுள் வாழ்த்து (முதல் பாடலாக இடம் பெறும்), நாட்டுச்சிறப்பு, மக்கள் சிறப்பு ஆகியவை அதில் முக்கிய இடம் பெறும் . இதற்கு சான்றாய், நளவெண்பாவில் நிடத நாட்டுச்சிறப்பை உணர்த்தும் இப்பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு


ஒரு நாட்டின் வளத்தை, அளவிட நீர் வளம், நில வளம் இன்றியமையாததாகும். அவை சிறப்பாக அமைந்தால், அந்நாடு வளமானதாகும்.
நில வளம் கூறும் நிகழ்ச்சிகள் - குவளை,தாமரை மலர்தல், திருமகள்/ நிலமகள் கண்கள் போல் அந்நிலம் இருத்தல்.
நீர் வளம் குறிக்கும் நிகழ்ச்சிகள் - கெண்டை மீன் பிறழ்தல்,நாடு கடல் சூழ்ந்து இருத்தல்.
காமர் கயல் - கெண்டைமீன்
காவி முகை - காவி நிறமுள்ள மொட்டு(குவளைப்பூ)
நெகிழ - மொட்டு தான் மலரும்போது இருக்கும் மென்மை, மகிழும் உணர்வு
தாமரையின் செந்தேன் தளையவிழப் -
தாமரையில் உள்ளிருக்கும் தேன் , மொட்டு மலரும் போது, தன் தளைகளை அவிழ்த்து , விடுதலை பெற்று வெளி வருகிறது .
பூமடந்தை தன்னாட்டம் போலும்- திருமகள்/நிலமகள் கண்கள் போல் ஒளி பெற்று
தகைமைத்ததே- அத்தகைய தன்மையைத் தன்னிடத்தே கொண்டு,
சாகரம் - கடல்
சாகரஞ்சூழ் நன்னாட்டின் முன்னாட்டும் நாடு - கடல் சூழ்ந்த நல்ல நாடுகளுக்குள், முன்னோடியாய் உள்ள நாடு

இவையனைத்தும் தன்னகத்தே கொண்டு நிடத நாடு மிகச் சிறப்புடன் இருந்ததை இப்பாடல் மூலம் அறிகிறோம்.


Reference :

Nalavenba - Tamil VU

Nalavenba - Tamil VU - page 2

Nala Thamayanthi story

Nalan story sanskrit - Sri Harsha

Thirunallaru



3 comments:

  1. Mudindhaal, ungal blog Il edavathu oru nool ai pattri virivaaga thodaru ezhudungal

    ReplyDelete
  2. Ungal aaruvam, mattrum Tamil vizhipunuravuvai paaratugiren.

    As a Tamil teacher myself, I liked walking down the old lane of my teaching days.
    Wishes,
    R.Bhavani

    ReplyDelete
  3. Please transliterate to English. Google and other translations don't really live up to the high standards that these works command.

    ReplyDelete